Archives: ஆகஸ்ட் 2024

ஞானமான கரிசனை

அந்தக் காட்சி மனதைக் கனக்கச் செய்தது. ஐம்பத்தைந்து பைலட் திமிங்கிலங்கள் ஸ்காட்லாந்தின் கடற்கரையில் சிக்கித் தவித்தன. ஆர்வலர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் இறுதியில் அவை இறந்தன. இதுபோன்ற திரளான மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இது திமிங்கிலங்களின் வலுவான சமூக பிணைப்பு காரணமாகக் கூட இருக்கலாம். ஒன்று சிக்கலில் சிக்கும்போது, ​​மீதமுள்ளவை உதவிக்கு வரும், ஒரு அக்கறையுள்ள உள்ளுணர்வு தான் ஆனாலும் முரண்பாடாகத் தீங்கு விளைவிக்கிறது.

பிறருக்கு உதவும்படி வேதாகமம் தெளிவாக நம்மை அழைக்கிறது, ஆனால் நாம் எப்படிச் செய்கிறோம் என்பதில் ஞானமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாவத்தில் சிக்கிய ஒருவரை மீட்டெடுக்க நாம் உதவும்போது, ​​​​அந்த பாவத்தால் நாமே இழுக்கப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் (கலாத்தியர் 6:1), மேலும் நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கும்போது, ​​​​நாம் நம்மையும் நேசிக்க வேண்டும் (மத்தேயு 22:39). நீதிமொழிகள் 22:3, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்" என்கிறது,  பிறருக்கு உதவுகையில் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எச்சரிப்பான நினைவூட்டல் இது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் தேவையோடிருந்த இருவர் எங்கள் சபைக்கு வரத் தொடங்கினர். விரைவில், கரிசனைகொண்ட சபையார் அவர்களுக்கு உதவியதால் நோந்துகொண்டனர். தீர்வாக அந்த  தம்பதியரை ஒதுக்காமல், ஆனால் உதவி செய்பவர்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லைகளை வகுத்துக் கொள்வதென்று முடிவானது. ஆதிகாரண உதவியாளரான இயேசுவும் இளைப்பாற நேரம் ஒதுக்கிக் கொண்டார் (மாற்கு 4:38) மேலும் தம் சீடர்களின் தேவைகள் பிறரின் தேவைகளால் மறைக்கப்படாமல் பார்த்துக் கொண்டார் (6:31). ஞானமான அக்கறைக்கு அவரே  முன்மாதிரி. நமது சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதன் மூலம், நீண்ட காலத்திற்கு நாம் அதிக அக்கறை செலுத்த முடியும்.

 

உன் கரத்திலிருப்பது என்ன?

நான் இரட்சிக்கப்பட்டு , என் வாழ்வைத் தேவனுக்கு அர்ப்பணித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என் பத்திரிகைத் துறை வேலையைக்  கைவிடும்படி என்னை வழிநடத்துவதை உணர்ந்தேன். நான் என் பேனாவைக் கீழே போட்டு, என் எழுத்து காணாமல் போனதால், ஒரு நாள் தேவன் தனது மகிமைக்காக எழுத என்னை அழைப்பார் என்று என்னால் உணர முடியவில்லை. எனது தனிப்பட்ட வனாந்தரத்தில் நான் அலைந்து திரிந்த ஆண்டுகளில், யாத்திராகமம் 4 இல் உள்ள மோசே மற்றும் அவரது கோலின் கதையால் நான் உற்சாகமடைந்தேன்.

பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருந்த மோசே, எகிப்தை விட்டு ஓடிப்போய், தேவன் அவனை அழைத்தபோது ஒரு மேய்ப்பனாக இருளில் வாழ்ந்து கொண்டிருந்தான். தேவனுக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லை என்று மோசே நினைத்திருக்க வேண்டும், ஆனால் அவருடைய மகிமைக்காக யாரையும் எதையும் பயன்படுத்த முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டான்.

"கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்" (யாத்திராகமம் 4:2-3). மோசேயின் சாதாரண கோல் சர்ப்பமாக மாறியது. அவர் சர்ப்பத்தைப் பிடித்தபோது, ​​தேவன் அதை மீண்டும் கோலாக மாற்றினார் (வ. 3-4). இஸ்ரவேலர்கள், "ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்" (வ. 5). மோசே தனது கோலை கீழே எறிந்துவிட்டு, அதை மீண்டும் கையில் எடுத்தது போல, ​​தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒரு பத்திரிகையாளராக நான் எனது வேலையை விட்டேன். பின்னர், எனது பேனாவை மீண்டும் எடுக்க அவர் என்னை வழிநடத்தினார், இப்போது நான் அவருக்காக எழுதுகிறேன்.

தேவனால் பயன்படுத்தப்பட நம்மிடம் அதிகம் இருக்க வேண்டுமென்றில்லை. அவர் நமக்குக் கொடுத்த தாலந்துகளை கொண்டே நாம் அவருக்குச் சேவை செய்யலாம். எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியவில்லையா? உங்கள் கையில் என்ன இருக்கிறது?

நியாயத்தின் தேவன்

ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, ​​அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய "தலையின்மேல்" மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்" (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். "நன்மையைத் தேட" மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.

ஏற்ற காத்திருத்தல்

புதிய பயணத்திற்கு முன்னானக் காதிருப்பைப் பற்றிப் பேசுவோமென்றால்; இடியுடன் கூடிய மழையால் தாமதமான விமானத்தில் ஏறுவதற்கு அருண் பதினெட்டு மணிநேரம் காத்திருந்தார். இருப்பினும் அவரது பொறுமையும் விடாமுயற்சியும் பலனளித்தன. அவர் செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்து சென்று முக்கியமான வியாபார கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றது மட்டுமல்லாமல், விமானத்தின் ஒரே பயணியும் அவர் மட்டுமே. மற்ற பயணிகள் அனைவரும் பின்வாங்கினர் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்தனர். விமானப் பணிப்பெண்கள் அவர் விரும்பிய உணவுப் பொருட்களை அவருக்குக் கொடுத்தனர், மேலும் அருண், "நான் நிச்சயமாக முன் வரிசையில் தான் அமர்ந்தேன். முழு விமானமும் உங்களுக்காக இருக்கும்போது தடையென்ன? " என்கிறார். மதிப்புமிக்க காத்திருப்பாக முடிவில் விளங்கியது.

ஆபிரகாமும் நீண்ட தாமதமாகத் தோன்றின ஒன்றைச் சகித்துக்கொண்டார். அவர் ஆபிராம் என்று அறியப்பட்டபோது, ​​தேவன் அவரை  "பெரிய ஜாதியாக்கி", " பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று கூறினார் (ஆதியாகமம் 12:2-3). எழுபத்தைந்து வயது முதியவருக்கு ஒரே ஒரு பிரச்சனை (வ. 4): வாரிசு இல்லாமல் அவர் எப்படி பெரிய தேசமாக மாற முடியும்? அவருடைய காத்திருப்பு சில சமயங்களில் தேவையற்றதாக இருந்தபோதிலும் (அவரும், மனைவி சாராயும் தேவனின் வாக்கை சில தவறான யோசனைகளின் மூலம் நிறைவேற்ற "உதவி" செய்ய முயன்றனர்; பார்க்க 15:2-3; 16:1-2), அவர் "தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்” (21:5). அவரது விசுவாசம் பின்னர் எபிரேய ஆக்கியோனால்  போற்றப்பட்டது (11:8-12).

காத்திருப்பது கடினமாகத் தோன்றலாம். மேலும், ஆபிரகாமைப் போல நாம் அதைச் சரியாகச் செய்யாமல் போகலாம். ஆனால் நாம் ஜெபித்து, தேவனின் திட்டங்களில் இளைப்பாறுகையில், ​​விடாமுயற்சியுடன் இருக்க அவர் நமக்கு உதவுவார். அவரில், காத்திருப்பு எப்போதும் பலனளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.